செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வு நடத்த பாஜக அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது - மு.க.ஸ்டாலின்

Published On 2020-09-28 10:47 GMT   |   Update On 2020-09-28 10:47 GMT
பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வு நடத்த பாஜக அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் பேராபத்தை விளைவிக்கும் ‘பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை’ நடத்த பாஜக அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது; முதலமைச்சர் பழனிசாமி அரசு இதனை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை” தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் களப்பரிசோதனை (Field Trial) செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித குலத்திற்கும் - உயிரினங்களுக்கும் ஆபத்தான பி.டி. கத்தரிக்காய் - நம் மண்ணின் பாரம்பரிய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி - வேளாண்துறையில் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் அனைத்துத் தரப்பு விவசாயிகளிடமும் நிலவி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் திணிப்பது கண்டனத்திற்குரியது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போது - குறிப்பாக 2010-ஆம் ஆண்டில் - மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்யத் தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை, தற்போது மத்திய பா.ஜ.க. அரசு மாற்றுகிறது. பண்ணை ஒப்பந்தம் என்று கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைகளாக்க முயற்சிப்பது போல், “பி.டி. கத்தரிக்காய்” என்று அறிமுகம் செய்து பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு நம்மூர் விவசாயிகளை அடிமையாக்கும் நடவடிக்கைக்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போகிறது.

மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை” பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது, விவசாயிகளின் எதிர்காலம் பற்றியோ அல்லது அவர்களின் நலன் பற்றியே கவலைப்படாத பொறுப்பற்ற போக்கு என்பதை விட, நம்மூர் விவசாயிகளுக்குக் கத்தரிக்காய் விவசாயத்தைக் கூட நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று கூறும் ஆணவப் போக்காகும். சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கத்தையே பாழ்படுத்தும் உள்நோக்கத்துடன், “சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020” வெளியிட்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, வேளாண்மைத்துறையிலும் “மாற்றம் என்ற பெயரில் மகா குழப்பங்களை” ஏற்படுத்தி - விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

ஆகவே, தமிழ்நாட்டில் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வுக்கு” வழங்கியுள்ள அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். “மாநில அரசும் உரிய அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தக் கள ஆய்வை மேற்கொள்ள இயலும்” என்பதால் – பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வினை தமிழ்நாட்டில் மேற்கொள்ள எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் - “விவசாயிகளுக்கு எதிரான” இந்தக் கள ஆய்வை முதலமைச்சர் பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ள முதலமைச்சர், 2020-2021-ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை - சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 70 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு 50 ரூபாயும் மட்டுமே “பெயரளவிற்கு” உயர்த்தியிருப்பது, விவசாயிகளுக்கு கடும்  கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அடிப்படை வாழ்வாதாரமே விவசாயம் என்பதால், இந்த குறைந்தபட்ச விலை அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும் - விவசாயத்தின் மீது விரக்தியையுமே ஏற்படுத்தி விட்டது.

குறிப்பாக, ஒரு விவசாயி தன்னுடைய சாதாரண ரக நெல்லை குவிண்டால் ஒன்றை 1918 ரூபாய்க்கும், சன்னரக நெல்லை குவிண்டால் ஒன்றை 1958 ரூபாய்க்கும் விற்றால் - “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழுத குச்சி கூட மிஞ்சாது” என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாகவே அமையும். ஆகவே வேளாண் தொழிலையே நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு - குவிண்டாலுக்கு 3000 ரூபாய் கிடைக்குமளவிற்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றில் எந்த இடத்திலும் குறைந்த பட்ச ஆதார விலை பற்றிக் குறிப்பிடப்படாத நிலையில், நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றை அறிவித்திருப்பது, அனைவரையும் திசைதிருப்பி ஏமாற்றும் முயற்சி என்பதை விவசாயிகள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.” என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News