செய்திகள்
கோப்புபடம்

உடுமலை பகுதியில் நோய் தாக்குதலால் கருகும் தென்னை மரங்கள்

Published On 2021-09-14 07:13 GMT   |   Update On 2021-09-14 07:13 GMT
தற்போது தேங்காய் வரத்து அதிகம் உள்ளதால் போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் வாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் கருகி வருகிறது. இது விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
 
உடுமலை பகுதியில் கூலித்தொழிலாளர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால் பலரும் தென்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். அதேநேரத்தில் தென்னை விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடுகிறது. 

குறிப்பாக தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் மகசூல் இழப்பை சந்தித்து வருகின்றனர். 

மேலும் தற்போது தேங்காய் வரத்து அதிகம் உள்ளதால் போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய்களை பல விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். இதுதவிர கொப்பரை உற்பத்தி செய்தும் இருப்பு வைத்துள்ளனர். 

இவ்வாறு பல்வேறு சிக்கல்களில் விவசாயிகள் சிக்கித்தவித்து வரும் நிலையில் வாளவாடி உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் தென்னை மரங்களில் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு ஓலைகள் கருகி வருகிறது.

மேலும் குரும்பை உதிர்ந்து காய்ப்புத் திறன் குறைந்துள்ளது. அத்துடன் காய்களிலும் நோய்த்தாக்கம் தெரிகிறது. இந்த நோயின் தாக்கத்தால் மரம் முழுவதும் கருகி வீணாகும் அபாயம் உள்ளது. 

எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நோய் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News