ஆன்மிகம்
வரவூர் மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் வரவூர் மாரியம்மன் கோவிலில் யாக பூர்ணாகுதி பூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடந்தது.
கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் வரவூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் கோ பூஜை நடந்தது. பின்னர் கணபதி பூஜையும், அதனை தொடர்ந்து கலச ஸ்தாபனத்துடன், சங்கல்ப பூஜையும், மூலமந்திர யாக வேள்வியும் நடந்தது.
இதையடுத்து காலை 10 மணிக்கு யாக பூர்ணாகுதி பூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடந்தது. பின்னர் சாமி வெள்ளிகவச அலங்காரத்தில் எழுந்தருளியதும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.