வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மன்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று பரணிக்கொடை விழா

Published On 2022-04-03 00:30 GMT   |   Update On 2022-04-02 05:03 GMT
மண்டைக்காடு பகவதி அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நாளை மீன பரணிக்கொடை விழா நடக்கிறது. நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடக்கிறது
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டு கட்டி சரண கோ‌ஷத்துடன் தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை பத்து நாட்கள் மாசிக்கொடை விழா நடந்தது.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று மீன பரணிக்கொடை விழா நடக்கிறது.

இதனையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம் நடந்தது.

6.30 மணிக்கு உ‌ஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு தக்கலை, திங்கள்நகர், குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
Tags:    

Similar News