செய்திகள்
நிஷா தர்ஷினி

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி பலி

Published On 2021-06-10 13:06 GMT   |   Update On 2021-06-10 13:06 GMT
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவரது மகள் நிஷா தர்ஷினி (வயது 13). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நிஷா தர்ஷினி, பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் பெருமாள்கோவில் தெருவில் வசிக்கும் தனது அக்காள் இளைய தர்ஷினி வீட்டுக்கு வந்திருந்தார். அவரை, கடந்த 5-ந் தேதி முதல் காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி போலீசில் புகார் அளித்திருந்தார். 

இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நிஷா தர்ஷினி பிணமாக மிதந்தது நேற்று தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் குளிக்க சென்ற நிஷா தர்ஷினி, கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
Tags:    

Similar News