பட்டிமன்றத்திற்கு கிடைத்த அங்கீகாரம் - பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா பெருமிதம்
பட்டிமன்றங்கள் மூலம் புகழ்பெற்ற சாலமன் பாப்பையாவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 85 வயதான சாலமன் பாப்பையா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்றங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சாலமன் பாப்பையா, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளார். பத்மஸ்ரீ விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழக பட்டிமன்றங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை பார்க்கிறேன். என்னுடன் பட்டிமன்றத்தில் பேச்சாளர்களாக பங்கேற்ற அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். பாமர மக்கள்தான் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை விரும்பி பார்த்தனர். இதன் மூலம் இந்த விருது அவர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் ஆகும். பட்டிமன்றங்களை வீதிகள் தோறும் கொண்டு சேர்த்தவர் குன்றத்தூர் அடிகளார். அதனை பெரிய அரங்கங்களுக்கு கொண்டு சேர்த்தவர் சா.கணேசன். அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதனை நினைத்து பார்க்கிறேன். இந்த விருது கிடைப்பதற்கு என்னுடன் பயணித்த பேச்சாளர்களும், பட்டிமன்றத்தை ரசித்த அனைத்து மக்களும் முக்கிய காரணமாகும். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.