செய்திகள்
ஸ்மித் - விராட் கோலி

இந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி

Published On 2020-11-29 07:43 GMT   |   Update On 2020-11-29 07:43 GMT
சிட்னியில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.
சிட்னி:

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வார்னர் மற்றும் பிஞ்ச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 142 ரன்கள் எடுத்தது. பிஞ்ச் 69 ரன்கள் எடுத்து வெளியேற வார்னரும் 83 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார். 

அடுத்து வந்த சுமித், லபுஸ்சேன் ஜோடி அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் இந்த தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 64 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆக, லபுஸ்சேன் 70 ரன்னிலும் வெளியேறினார்.

கடைசி ஓவரில் அதிரடியை காட்டிய மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். இதையடுத்து 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 389 ரன்கள் எடுத்தது.

390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கும். இந்திய அணி தரப்பில் முகமது சமி, பும்ரா, பாண்ட்யா, தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Tags:    

Similar News