செய்திகள்
ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்த காட்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம்

Published On 2019-08-22 18:01 GMT   |   Update On 2019-08-22 18:01 GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் நடந்தது
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

விநாயகர் சிலையை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிலத்தின் உரிமையாளர்களிடமிருந்தும், அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையிடமிருந்தும், நெடுஞ்சாலை மற்றும் வேறு துறைக்கு சொந்தமான இடமாக இருப்பின் தொடர்புடைய அலுவலர்களிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலை அருகில் வைக்கப்பட உள்ள ஒலிப்பெருக்கிக்கான அனுமதியினை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசாரிடம் பெற வேண்டும்.

விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடம், தீ பாதுகாப்பு விதிகளின்படி அமைந்துள்ளதா? என தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து, சான்று அளிக்கவேண்டும். மேலும், நிறுவப்பட உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் தூய களிமண்ணால் மற்றும் நீரில் எளிதில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், ரசாயன வர்ணம் பூசப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக்கூடாது. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களின் அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுவதை ஒருங்கிணைப்பாளர்கள் தவிர்க்கவேண்டும். சிலைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இடங்களில் மட்டுமே கரைக்கப்படவேண்டும். விநாயகர் சிலை கரைப்பதற்கான வாகன ஊர்வலம் போலீசார் அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News