செய்திகள்
கள்ளக்காதல் விவகாரம் வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு 8 பேர் கைது

கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு - 8 பேர் கைது

Published On 2021-07-08 15:07 GMT   |   Update On 2021-07-08 15:07 GMT
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர்.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா படப்பை ஊராட்சியில் உள்ள முருகாத்தம்மன் பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 34). இவர் படப்பை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ராமு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ரேணுகா பல்வேறு இடங்களில் ராமுவை தேடி பார்த்தார். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து ரேணுகா, தனது கணவர் மாயமானது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் படப்பை அடுத்த சாலமங்கலம் சிறுமாத்தூர் அருகே காவல்கழனி என்ற இடத்தில் கருவேல மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து கிணற்றில் இருந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கொலை வழக்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்த நபர் மாயமான ராமு என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக சாலமங்கலம் நரியம்பாக்கத்தை சேர்ந்த மணி (39)யை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் மணிக்கு மகாலட்சுமி (32) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. மேலும் மணியின் மனைவி மகாலட்சுமிக்கும் ராமுவுக்கும் 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது மணிக்கு தெரியவர ராமுவையும், மனைவியையும் பலமுறை மணி கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ளத்தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணி ராமுவை தீர்த்துகட்ட திட்டம் தீட்டியுள்ளார். கடந்த 4-ந்தேதி போன் மூலம் ராமுவை மது குடிக்க அழைத்தார். அங்கு வந்த ராமு, மணி மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். மது போதையில் கள்ளக்காதல் சம்பந்தமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றியதையடுத்து ராமுவின் கழுத்தை கத்தியால் வெட்டி கொன்று சேலையால் அவரது உடலில் கல்லை கட்டி காவல் கழனியிலுள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டதும் தெரியவந்தது.

போலீசார் மணியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த தினேஷ் (21), வினோத் (20), பிரபாகரன் (23), சாலமங்கலம் பகுதியை சேர்ந்த பூவேந்திரன் (19), நரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19), ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த பரத்குமார் (20) சாலமங்கலம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News