செய்திகள்
பில் கேட்ஸ் கூறியதாக வைரலாகும் பகீர் தகவல்
கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து பற்றி மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கூறியதாக வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து பற்றி உலகம் முழுக்க பல்வேறு தவறான தகவல்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், நாடு முழுக்க பேஸ்புக்கில் வைரலாகும் தகவல்களில் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து ஏழு லட்சம் மக்களை மரணிக்கவும் அல்லது செயலிழக்க செய்யும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த தகவல் ஸ்கிரீன்ஷாட், ஜெர்மனியை சேர்ந்த வலைதளம் ஒன்றின் செய்தி தொகுப்பு இணைய முகவரி வடிவில் பேஸ்புக்கில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வைரல் பதிவுகளில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பில் கேட்ஸ், கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து ஏழு லட்சம் பேரை மரணிக்க செய்யும் என தெரிவித்தார் என கூறப்பட்டு உள்ளது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஏப்ரல் 9, 2020 அன்று பில் கேட்ஸ் அளித்த பேட்டியின் வீடியோ காணக்கிடைத்தது. அதில் அவர் உலகம் முழுக்க கொரோனாவைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்து மூலம் சுமார் ஏழு லட்சம் பேருக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்து இருக்கிறார்.
எனினும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் நிரந்தர உயிரிழப்பு அல்லது உடல் செயலிழப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும் என அவர் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் வைரல் தகவல்களில் பில் கேட்ஸ் கூறிய தகவல் தவறாக பகிரப்பட்டு வருவது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.