செய்திகள்
கொலை

சென்னிமலைஅருகே தலையில் கல்லைபோட்டு தொழிலாளி கொலை

Published On 2021-09-12 06:38 GMT   |   Update On 2021-09-12 06:38 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தலையில் கல்லைபோட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு-கனகபுரம் சாலையின் இடைப்பட்ட மட காட்டுத்தோட்டம் என்னும் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்குள்ள ஒரு தோட்டத்தில் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவர் தலையில் பலத்த காயங்கள் இருந்தன.

பெருந்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் சென்னிமலை அடுத்த ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 40) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் செல்வராஜை மர்மநபர்கள் யாரோ தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. செல்வராஜ் எந்த காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் ? என்ற காரணம் தெரியவில்லை. செல்வராசை வேறு எங்காவது கொலை செய்து விட்டு தோட்டத்தில் வந்து வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News