தொழில்நுட்பம்
டெக் நிறுவனங்களை கேள்விகளால் துளைத்த அமெரிக்க நாடாளுமன்றம்
போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுப்பதாக எழுந்த புகாரில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது.
போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் சூக்கர்பர்க் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டனர். அப்போது இவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் குறிப்பிட்ட பெரு நிறுவனங்கள், தங்களது வளர்ச்சிக்காக சிறு நிறுவனங்களை முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், அமேசான், கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தன. அதேசமயம், தாங்கள் அமெரிக்காவை சேர்ந்த பெருநிறுவனம் அல்ல எனவும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.