செய்திகள்
கல்லூரி மாணவி தற்கொலை

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை - தந்தை போலீசில் புகார்

Published On 2019-12-14 09:57 GMT   |   Update On 2019-12-14 09:57 GMT
காஞ்சிபுரம் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரத்தில் உள்ள சின்னையனன்சத்திரத்தை அடுத்த சூரமணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பொற்செல்வி (20). இவர் காஞ்சிபுரம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் படித்து வந்தார். மணிகண்டனும், பொற்செல்வியும் காதலித்து வந்தனர்.

காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் வீட்டை வீட்டுக்கு வெளியேறி காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

சுங்குவார் சத்திரம் அடுத்த மொளச்சூர் வேளாங்கன்னி நகர் பகுதியில் வீடு வாடைகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை பொற்செல்விக்கும் மணிகண்டனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பியபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே பொற்செல்வி மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொற்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பொற்செல்வியின் தந்தை மணி தன் மகளை வரதட்சணை கேட்டு மணிகண்டன் கொடுமைபடுத்தி வந்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசில் புகார் செய்து உள்ளார்.

திருமணம் ஆகி 2 வருடம் ஆவதால் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News