செய்திகள்
ஆதார் அட்டை

பான் கார்டு இல்லாமல் ஆதார் எண் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய நடைமுறை

Published On 2019-07-08 01:13 GMT   |   Update On 2019-07-08 01:13 GMT
பான் கார்டு இல்லாமல், ஆதார் எண் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய நடைமுறை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி:

ஆதார் திட்டம் செல்லும் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, ஆதார் எண்ணையும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படும் ‘நிரந்தர கணக்கு எண்ணையும்’ (பான்) வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

தற்போதைய நிலையில், 120 கோடிக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணும், சுமார் 41 கோடி பேருக்கு ‘பான்’ எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், 22 கோடி ‘பான்’ எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஆதார்-பான் எண்கள் இணைப்பை உறுதி செய்ய, பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

இதனால், பான் எண் தேவையற்றதாகி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய (சி.பி.டி.டி.) தலைவர் பிரமோத் சந்திர மோடியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

அந்த கோணத்தில் பார்ப்பது தவறு. பான் எண், நிச்சயமாக செயலிழந்து போகவில்லை. பான் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. பான் எண் இல்லாமல், ஆதார் எண் மட்டும் இருப்பவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய நடைமுறையாகவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அத்தகையவர்களுக்கு வருமான வரி கணக்கு மதிப்பீட்டு அதிகாரிகள், தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, தாங்களாக முன்வந்து புதிய ‘பான்’ எண் ஒதுக்குவார்கள். இதற்கு சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. பான் எண் ஒதுக்கிய பிறகு, சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் எண்ணும், பான் எண்ணும் இணைக்கப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News