திருவாரூர் அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் சரகம் திற்கு உட்பட்ட இடையார்நத்தம் கிராமத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஏ.டி.எம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனருகே கிருஷ்ண மூர்த்தி பெட்டி கடை வைத்துள்ளார். இந்த ஏ.டி.எம் மையத்திற்கு காவலாளி பணியமர்த்தப்பட வில்லை. இதன் சாவி கிருஷ்ண மூர்த்தியிடம் வங்கி சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஏ.டி.எம்மில் ஒருவர் பணம் எடுத்துள்ளார். பின்னர் யாரும் பணம் எடுக்க வரவில்லை.
மேலும் அப்போது கனமழை பெய்து கொண்டு இருந்ததால் கிருஷ்ணமூர்த்தி ஏ.டி.எம் மையத்தை பூட்டு விட்டு சென்று விட்டார். தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல் அவர் ஏ.டி.எம்ஐ திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு பூட்டு தனியாகக் கிடந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனே பரவாக்கோட்டை போலீசுக்கும், வங்கி அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் டி.எஸ்.பி கார்த்திக் பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏ.டி.எம் மையத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
ஏ.டி.எம்மில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது மர்மநபர்கள் முகமுடி அணிந்து வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த மர்ம நபர்கள் ஷட்டரை உடைத்த போது திடீரென அலாரம் ஒலித்ததால் பயந்து கொள்ளை முயற்சியை பாதியில் விட்டு விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏ.டி.எம்மில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. தொடர்ந்து திருவாரூரிலிருந்து தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.