செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி.

கள்ளக்குறிச்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-09-17 17:05 GMT   |   Update On 2019-09-17 17:05 GMT
கள்ளக்குறிச்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நகராட்சி 17-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் அதே பகுதியில் உள்ள மினிகுடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்தனர். இதற்கிடையே ஆழ்துளை கிணற்றில் இருந்து அந்த மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வது முற்றிலும் தடைபட்டது. மேலும் டிராக்டர் மூலம் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், பழுதான மின்மோட்டாரை சரிசெய்யக் கோரியும் நேற்று மாலை 4 மணி அளவில் சேலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் நகராட்சி மேற்பார்வையாளர் கோபி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பழுதான மின்மோட்டாரை சரிசெய்து தருவதாகவும், குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News