செய்திகள்
மஞ்சள் கொத்து

பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான மஞ்சள்

Published On 2020-01-10 10:24 GMT   |   Update On 2020-01-10 10:24 GMT
நெகமம் அருகே ஒரு ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாராக உள்ளது.
நெகமம்:

கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் சாகுபடி அதிகளவில் இருந்தது. அப்போது மஞ்சள் சாகுபடிக்கு இடையே மிளகாய், துவரை, ஆமணக்கு, கொள்ளு, வாழை செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்தனர். இதில் மிளகாய், துவரை, ஆமணக்கு மற்றும் வாழை அறுவடை செய்யப்படும்.

இதனால் ஒரு ஆண்டு சாகுபடியில் 4 பயிர்களை அறுவடை செய்து விவசாயிகள் லாபம் பார்த்து வந்தனர். இதற்கு பாசன கிணறுகளில் போதிய நீர் இருந்ததாலும், பருவமழை தவறாமல் பெய்து வந்ததும் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் 12 மாதம் சாகுபடியான மஞ்சள் கிழங்குகள் ஆண்டுக்கு ஒருமுறை தோண்டி எடுக்கப்பட்டு, ஒருமாத காலம் வேக வைக்கபட்டு பின்னர் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இதனால் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகளுக்கு திருப்திகரமாக இருந்து வந்தது. ஆனால் நாளடைவில் போதிய மழை இல்லாததால், பாசன நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மஞ்சள் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலும் குறுகிய கால பயிர் சாகுபடியை அதிகம் விரும்புவதோடு, 3 முதல் 4 மாதங்களில் வருமானம் கிடைக்கும் சாகுபடிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நெகமம் பகுதியில் உள்ள விவசாயிகள் தென்னைக்கு அடுத்ததாக தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், புடலங்காய், பாவற்காய், அரசாணிக்காய், முள்ளங்கி, கொத்தவரங்காய், பூசணிக்காய் பொறியல்தட்டை உற்பத்திக்கு மாறிவிட்டனர்.

இதனால் மஞ்சள் சாகுபடி வெகுவாக மறைந்து வருகிறது. இருப்பினும் பாரம்பரியத்தை மறக்காத ஒரு சில விவசாயிகள் மட்டும் ஒரு ஏக்கர், 2 ஏக்கருக்கும் குறைவான பரப்பளவில் மஞ்சளை தனிப்பயிராக சாகுபடி செய்யாமல், தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக நடவு செய்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது தோட்டம், வீடு மற்றும் கோவில்களில் நடக்கும் பொங்கல் விழாவின்போது வாழை இலையில் பொங்கல், கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கனிகள், மற்றும் கடவுளுக்கு தேவையான பொருட்களை வைத்து வழிபடுவார்கள். இதில் மஞ்சள் கொத்து முக்கிய அங்கமாக விளங்குகிறது.

இதையொட்டி நெகமம் அருகே உள்ள எம்மேகவுண்டன் பாளையத்தில் ஒரு ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாராக உள்ளது. மொத்த வியாபாரிகள், ஒட்டுமொத்த மஞ்சள் சாகுபடியையும், கொள்முதல் செய்து, ஆட்களை விட்டு தோண்டி எடுத்து பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், உடுமலை, சுந்தராபுரம், பல்லடம், சூலூர், நெகமம், சோமனூர், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப உள்ளனர்.

கடந்த ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் கொத்து, ரூ.35 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் கொத்து, ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகும் என விவிசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News