செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடர மத்திய அரசு அனுமதி

Published On 2020-09-15 22:08 GMT   |   Update On 2020-09-15 22:08 GMT
இந்தியாவில் ’கோவிஷீல்டு’ என பெயரிடப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியின் பரிசோதனையை சீரம் இன்ஸ்டிடியூட் மீண்டும் தொடர இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. 

ஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பக்கவிளைவு காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் பெற்றுள்ளது. 
இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளன.

மேலும், இந்த ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி வழங்கி இருந்தது.   

இந்த பரிசோதனைக்கு நாட்டில் மொத்தம் 17 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட 1,600 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அடுத்தக்கட்ட மனித பரிசோதனை விரைவில் நடைபெற இருந்தது. 

ஆனால், இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாம நிறுத்தப்பட்டதால் இந்தியாவிலும் தடுப்பூசி பரிசோதனையை உடனடியாக நிறுத்திவைக்க சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில் ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என தெரியவந்தது. இதனால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இங்கிலாந்து அரசு நீக்கம் செய்யப்பட்டது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டத்தையடுத்து இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனையை ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் தடுப்பூசி பரிசோதனையை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பரிசோதனையை மீண்டும் தொடங்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) நேற்று அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த அனுமதியையடுத்து, தற்போது நிறுத்தப்பட்டுள்ள ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பரிசோதனையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் கூடிய விரைவில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News