கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் மீது ஆசீட் வீசிய போலீசார்- சகோதரர் புகார்
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பந்தலூரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (39). இவர்கள் 2 பேரையும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் தேவாலா போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சிவராஜின் மர்ம உறுப்பு, ஆசனவாய், தொடை ஆகிய பகுதிகளில் போலீசார் ஆசிட்டை வீசியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிவராஜ், சகாதேவன் ஆகியோரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிவராஜ் மீது ஆசிட் வீசியது குறித்து அவரது உறவினர்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த அவருக்கு சிறையில் வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராஜ், சகாதேவன் ஆகியோர் இன்று காலை ஜெயில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர். அவர்களை அழைத்து செல்வதற்காக உறவினர்கள் கோவை மத்திய சிறைக்கு வந்து இருந்தனர். அப்போது தான் சிவராஜ் மீது போலீசார் ஆசிட் வீசிய சம்பவம் தெரிய வந்தது.
இது குறித்து சிவராஜின் சகோதரர் கார்த்திக் கூறும்போது:-
எனது சகோதரனுக்கு நடந்த இந்த செயல் மனித உரிமையை மீறிய செயல். எனவே சிவராஜ் மீது ஆசிட் வீசிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மனித உரிமை ஆணையம் ஆகியவற்றில் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.