ஆன்மிகம்
சரவணம்பட்டியில் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கோவையை அடுத்த சரவணம்பட்டியில் பட்டத்தரசி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கோவையை அடுத்த சரவணம்பட்டியில் பட்டத்தரசி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக 3-ந் தேதி மாலை 4 மணிக்கு சிரவணமாபுரீஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, காப்பு அணிதல், 7 மணிக்கு 108 மூலிகைகளுடன் முதற்கால வேள்வி பூஜை, 9 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு மருந்து சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
4-ந் தேதி காலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மூர்த்திகளுக்கு காப்பு அணிதல், 5 மணிக்கு 108 மூலிகைகளுடன் 2-ம் கால வேள்வி பூஜை நிறைவு செய்யப்பட்டது. காலை 6 மணிக்கு திருக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, 6.15 மணிக்கு விமான கலசத்திற்கு தமிழில் வேத மந்திரங்கள் ஓத, மங்கள இசையுடன் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சாக்தஸ்ரீ வாராஹி மணிகண்டசுவாமிகள் ஆகியோர் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
காலை 8 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசை முழங்க மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், கவுண்டன்பாளையம் தொகுதி வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மகா அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பட்டத்தரசி அம்மன் வழிபாட்டு மன்றம், சிரவணமாபுரீஸ்வரர் வழிபாட்டு மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.