செய்திகள்
கோப்புப்படம்

10 மாத கொரோனா காலத்தில் சென்னை விமான நிலையத்தில் 101 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2021-01-26 22:31 GMT   |   Update On 2021-01-26 22:31 GMT
10 மாத கொரோனா காலத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கடத்திவரப்பட்டதாக 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் சரக்கக சுங்க இலாகா அலுவலகத்தில் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தேசிய கொடியை ஏற்றி வைத்து சுங்க இலாகா அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 10 மாத கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றங்களை தடுப்பது மிகுந்த சவாலாக இருந்தது. கொரோனா காலத்தில் பன்னாட்டு முனையத்திற்கு 540 சிறப்பு விமானங்கள் வந்தன. அதில், 2 லட்சம் பேர் வரை பயணம் செய்தனர்.

10 மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பன்னாட்டு சரக்ககம் மற்றும் பன்னாட்டு தபால் நிலையங்களில் கடத்தப்பட்டதாக ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 102 போதை பொருட்களை பறிமுதல் செய்து, 11 பேர் பிடிப்பட்டனர்.

மேலும், தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியதாக 64 வழக்குகளில் ரூ.46 கோடி மதிப்புள்ள 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக 80 பயணிகள் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் சுங்கத்துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் டாலர், யூரோ, உள்ளிட்ட வெளிநாட்டு பணங்களும் பிடிபட்டன.

அதைத்தொடர்ந்து வெளிநாடுகளை சேர்ந்த அரியவகை உயிரினங்களான எலி, அணில், ஓணான், பச்சோந்தி உள்ளிட்ட வனவிலங்குகள் உரிய அனுமதியின்றி கடத்தி வந்ததாக பிடிபட்டன. தென் இந்தியாவில் கொரோனா காலத்தில் சிறந்த முனையமாக செயல்பட்டதாக சென்னை விமான நிலையம் விளங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், விமான நிலையத்தில் மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது. தேசிய கொடியை சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சுனில் தத் ஏற்றி வைத்து மத்திய தொழிற்படை போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
Tags:    

Similar News