இஸ்லாம்
நாகூர் தர்கா

நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது

Published On 2022-01-13 02:50 GMT   |   Update On 2022-01-13 02:50 GMT
இன்று இரவு 7 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நாகை- நாகூர் சாலை வழியாக நாகூர் அலங்கார வாசலை வந்தடைகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார். தர்கா நிர்வாகம் சார்பில் 45 பேர் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சந்தனக்கூடு ஊர்வலத்தின்போது 8 மின் அலங்கார ஊர்திகள் வலம் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சந்தனக்கூடு மட்டும் நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூர் தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இன்று இரவு 7 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நாகை- நாகூர் சாலை வழியாக நாகூர் அலங்கார வாசலை வந்தடைகிறது.
Tags:    

Similar News