ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் ஆண்டாள் நீராடல் உற்சவம் கடந்த 11-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 3-ம் நாளான நேற்று போகி பண்டிகையை முன்னிட்டு ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆண்டாள் தேவநாதசாமியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.