செய்திகள்
கமல் ஹாசன்

வந்தபின் கட்டுப்படுத்துவது கஷ்டம்... கிராமங்கள் மீதும் கவனம் செலுத்துங்கள் -கமல் வலியுறுத்தல்

Published On 2020-07-11 10:32 GMT   |   Update On 2020-07-11 10:32 GMT
நகரங்களில் பரவலான ஆய்வுகள் மூலம் நோய்த்தொற்று இருப்பதை ஆராயும் அரசு, கிராமப்புறங்களின் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும் என கமல் ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 நாட்களில் மாறி இருப்பதும் பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவரு வதை உணர்த்துகிறது. 

நகரங்களில் பரவலான ஆய்வுகள் மூலம் நோய்த்தொற்று இருப்பதை ஆராயும் அரசு, கிராமப்புறங்களின் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும். 

நோய்த்தொற்று கண்டறிதல், அதற்கான சிகிச்சைகள், அது குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் கிராமங்களில் அதிகப்படுத்த வண்டிய அவசியம் வந்திருப்பதற்கு, கிராமங்களை அரசு இத்தனை நாள் கண்டுகொள்ளாமல் விட்டதே காரணம். 

தமிழகத்தின் பல கிராமங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள், மருத்துவ ஊழியர்களோ இன்றிதான் செயல்படுகின்றன. பல நவீன மருத்துவமனைகளைக் கொண்ட பெரும் நகரங்கள் கொரோனாவின் தாக்கத்தில் தள்ளாடும்போது ஆரம்ப சுகாதார மையங்கள் நோய்த்தொற்று அதிகரித்தால் என்னவகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

முறையான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார மையங்கள், அது இல்லையென்றால் அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கும் கிராமங்களில் இந்த கொரோனா தொற்று வருமுன் தடுக்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். வந்தபின் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயம் என்று உணர்ந்து செயல்படவேண்டும். கிராமங்களில் இத்தொற்று பரவினால் நம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பொருளாதார அளவில், மருத்துவ அளவில் மட்டுமல்ல அடிப்படைத் தேவைகள் கூட கிட்டாத அளவிற்கு செல்லக்கூடும்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என பாடப்புத்தகத்தில் மட்டும் சொல்லாமல், செயலில் காண்பித்து, கிராமங்கள் இத்தொற்று பரவலில் சிக்காமல் இருக்க விரைந்து காத்திடுவது நம் கடமை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News