செய்திகள்
மோசடி

வில்லியனூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: காய்கறி வியாபாரி தலைமறைவு

Published On 2019-10-25 11:35 GMT   |   Update On 2019-10-25 11:35 GMT
வில்லியனூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த காய்கறி வியாபாரி கடையை பூட்டி விட்டு தலைமறைவானார்.

வில்லியனூர்:

வில்லியனூர் மூலக்கடையில் கடந்த சிலஆண்டுகளாக பலராமன் (வயது48) என்பவர் ஓட்டன்சத்திரம் காய்கறிகடை என்ற பெயரில் பெரிய அளவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளரிடம் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி பலராமன் குறைந்த பட்சம் ரூ. 500 முதல் ரு. 2 ஆயிரம் வரை மாத தொகையாக வசூலித்தார். தீபாவளி பண்டிகையின் போது காய்கறி மளிகை பொருட்கள், தங்கம், பட்டாசு, இனிப்பு என பல பொருட்கள் தருவதாக பணம் வசூல் செய்தார். அப்போது ரூ.1 கோடி வரை அவர் வசூலித்துள்ளார்.

தீபாவளி நெருங்கியதால் பணம் கட்டியவர்கள் பொருட்கள் கேட்டபோது நேற்று முன்தினம் மாலை காய்கறி கடைக்கு வருமாறு பலராமன் கூறினார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பணம் கட்டியவர்கள் பொருட்கள் வாங்க காய்கறிகடைக்கு வந்தனர். அப்போது காய்கறி கடை பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவசர வேலையாக பலராமன் வெளியூர் சென்றிருக்கலாம் என கருதி அவர்கள் அங்கிருந்து சென்றனர். நேற்று காலை மீண்டும் காய்கறிகடைக்கு வந்த போது அப்போதும் கடை பூட்டப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். பணத்தை மோசடி செய்து விட்டு பலராமன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தீபாவளி சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் அவர் கடை அருகே மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதுதொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News