வழிபாடு
27 அடி உயர லிங்க வடிவிலான கோவிலில் கும்பாபிஷேகம்

27 அடி உயர லிங்க வடிவிலான கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2022-04-16 04:39 GMT   |   Update On 2022-04-16 04:39 GMT
வேடசந்தூர் அருகே 27 அடி உயர லிங்க வடிவிலான கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேடசந்தூர் அருகே கூவக்காபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் 27 அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் காசி லிங்கேஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இந்தநிலையில் கோவிலில் உள்ள காசி லிங்கேஸ்வரர், பழையூர் விநாயகர், கன்னிமூல கணபதி, பரமேஸ்வரி அம்மன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. அதன் பின்னர் கலசம், யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு கலச பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து முதற்கால யாக வேள்வி தொடங்கியது. பின்னர் 2-ம், 3-ம் கால யாக வேள்விகள் நடத்தப்பட்டு, சாமி எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை 4-ம்கால யாக வேள்வி நடந்தது. பின்னர் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News