செய்திகள்

சின்னமனூர், போடி, பழனி பகுதியில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

Published On 2019-05-13 05:52 GMT   |   Update On 2019-05-13 05:52 GMT
சின்னமனூர், போடி, பழனி பகுதியில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை சுற்றுலா தலம் உள்ளது. தற்போது இங்கு குளுகுளு சீசன் நிலவி வருகிறது. சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

மதுரை எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ரோகித்சஞ்சய் (வயது21) தனது நண்பர்களுடன் மேகமலைக்கு சுற்றுலா வந்தார். மேகமலையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மகராஜமெட்டு மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது ரோகித்சஞ்சய் நண்பர்களுடன் பந்தயம் கட்டி அணையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நீந்தி சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதுபற்றி ஹைவேவிஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

நிலைய அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்புத்துறையினர் ரோகித்சஞ்சையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலை நேரமாகி விட்டதால் இன்று காலை தேடும் பணி நடந்தது. வெகுநேர தேடுதலுக்கு பின்னர் மாணவர் ரோகித்சஞ்சய் கிடைக்காததால் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மற்றொரு சம்பவம்...

பழனி அருகே உள்ள சத்திரப்பட்டியை அடுத்த மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விவேக் (19). இவர் பட்டிவீரன்பட்டியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வத்தலக்குண்டு அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று விவேக் தனது நண்பர்களுடன் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சென்றனர். அருவிக்கு கீழ் பகுதியில் உள்ள ஆபத்தான யானை பள்ளத்தில் அவர்கள் குளித்தபோது விவேக்குக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அவருடைய நண்பர்கள் விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விவேக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் ஜெங்கால்.கூலித்தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீகாந்த் (6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாட்டு சாணம் பொறுக்கச் சென்றான். அப்போது அங்குள்ள திருமலைநம்பி கல்குவாரியில் சேறு சகதி நிறைந்த தண்ணீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். சிறிது நேரத்தில் அவன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் உடலை போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

முறையான அனுமதியின்றி அரசு அனுமதித்த அளவை காட்டிலும் 2 மடங்கு பள்ளங்கள் தோண்டி கல்குவாரி நடத்தியதோடு அவற்றை முறையாக பராமரித்து தண்ணீர் கிடங்குகளை மூடாமல் அலட்சியமாக விட்டதால் மாணவன் பலியானதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் அரசின் விதிகளை மதிக்காமல் முறைகேடாக கல் குவாரி நடத்தி வரும் திருமலைநம்பி குவாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News