செய்திகள்
டாக்டர்கள் கடவுளின் வடிவம் -தேசிய மருத்துவர் தினத்தில் பிரதமர் மோடி உரை
எல்லா சிக்கல்களும் இருந்தபோதிலும், இந்தியாவின் நிலை, மற்ற வளர்ந்த நாடுகளை விட ஸ்திரமாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, மருத்துவர்கள் தினத்தில், அனைத்து மருத்துவர்களுக்கும் 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
மருத்துவர்கள் கடவுளின் வடிவம் என்று அழைக்கப்படுகிறார்கள். தேசம் இன்று தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் அயராது உழைத்துள்ளனர். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தங்களின் உயிரைக் கொடுத்த மருத்துவர்களும் இருக்கிறார்கள். உயிர்த்தியாகம் செய்த அவர்களுக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் கூறினார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நமது டாக்டர்களின் அறிவு மற்றும் அனுபவம் நமக்கு மிகவும் உதவியாக உள்ளது என்று பாராட்டிய பிரதமர் மோடி, சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இரு மடங்காகி உள்ளது என்று தெரிவித்தார்.
சுகாதார வசதிகள் இல்லாத பகுதிகளில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.50,000 கோடி கடன் உத்தரவாத திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்... தேசிய மருத்துவர் தினம் ஜூலை 1-ல் கொண்டாடுவது ஏன்?
இன்று, நமது மருத்துவர்கள் கொரோனாவுக்கான நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துகின்றனர். இதற்கு முன்பு, மருத்துவ உள்கட்டமைப்பு எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்பதை நாம் பார்த்தோம். எல்லா சிக்கல்களும் இருந்தபோதிலும், இந்தியாவின் நிலை, மற்ற வளர்ந்த நாடுகளை விட ஸ்திரமாக உள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.