கோவையில் பெண் அழகு கலை நிபுணர் தற்கொலை
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ராஜன் நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் தேவராஜன். இவரது மனைவி தீபா (வயது 35). அழகுகலை நிபுணர்.
இவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தார். தீபா தனது தொழில் தேவைக்காக அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த தீபா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.