செய்திகள்
திருச்சி அருகே அரசு ஊழியர்கள் நூதன போராட்டம்
திருச்சியில் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுத்து அரசு ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 7-வது நாளாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். முன்னதாக தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் நவநீதன் தலைமையில் நூதன போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் நெற்றியில் பட்டைநாமம் போட்டு மண் சட்டி ஏந்தியபடி கோஷம் போட்டனர். அந்த சட்டியில் சிலர் பிச்சையிவடுவது போல் காசு போட்டனர்.
அதன்பின்னர் சாலை மறியல் போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன் தொடங்கிவைத்தார். புள்ளியியல் துறை அதிகாரிகள் சங்க மாநில பிரசார செயலாளர் பால்பாண்டி, நுண்கதிர் துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சுரேஷ் பிரபு, சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். சாலை மறியல் செய்வர்களில் 50 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.