செய்திகள்
ஜம்மு மக்களை ஓரங்கட்டிய காலம் முடிந்துவிட்டது- அமித் ஷா பேச்சு
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியில் இளைஞர்கள் இணைந்தால், பயங்கரவாதிகள் தங்கள் கட்டமைப்பில் தோல்வி அடைவார்கள் என உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இன்று ஜம்மு பகவதி நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
ஜம்மு மக்களை ஓரங்கட்டிய காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஜம்மு -காஷ்மீர் வளர்ச்சியில் யாராலும் தடைகளை உருவாக்க முடியாது. ஜம்மு யூனியன் பிரதேசத்திற்கு ஏற்கனவே ரூ.12000 கோடி முதலீடு வந்துள்ளது. 2022ம் ஆண்டு இறுதியில் இந்த முதலீட்டை ரூ.51000 கோடியாக உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியில் இளைஞர்கள் இணைந்தால், பயங்கரவாதிகள் தங்கள் கட்டமைப்பில் தோல்வி அடைவார்கள். வன்முறையில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படக்கூடாது என்பதே அரசின் நோக்கம். ஜம்மு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் அழிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமித் ஷா வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்... பண்டிகையின்போது மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு