தொழில்நுட்பச் செய்திகள்
சத்தமில்லாமல் இந்தியாவில் விலையை உயர்த்திய ஆப்பிள் - காரணம் இது தான்!
இந்த விலை உயர்வை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ஆப்பிள் இணையதளத்தில் விலைகள் உயர்த்தி காணப்படுகின்றன.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில் மின்னணு பொருட்கள் மீதான சுங்க வரியில் பல மாற்றங்களை அறிவித்தது.
இதன்படி இயர்பட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரித்தது. இதனால் வயர்லெஸ் இயர்பட்கள், நெக்பேண்ட் ஹெட்ஃபோன்கள் போன்றவற்றின் விலை உயரும் என கூறப்பட்டது.
அதேபோன்று ப்ரீமியம் ஹெட்ஃபோன்களின் நேரடி இறக்குமதிக்கு 20 சதவீதம் கூடுதல் கட்டணத்தை அரசாங்கம் அறிவித்தது. இதனால் இறக்குமதி செய்யப்படும் ஹெட்போன்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆடியோ சாதனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
2 மற்றும் 3-வது ஜெனரேஷன் ஏர்போட்ஸ், ஏர்போட்ஸ் மேக்ஸ் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ ஆகியவற்றுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ஆப்பிள் இணையதளத்தில் இயர்போன்களின் விலை உயர்த்தி காணப்படுகின்றன.
2வது ஜெனரேஷன் ஆப்பிள் ஏர்போட்ஸ் ரூ.12,900-ல் இருந்து ரூ14,100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3-வது ஜெனரேஷன் ஏர்போட்ஸ் ரூ.18,500-ல் இருந்து ரூ.20,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏர்போட்ஸ் ப்ரோ ரூ.24,900-ல் இருந்து ரூ.26,300-ஆக உயர்துள்ளது. ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்செட்டுகள் ரூ.59,000-ல் இருந்து ரூ.66,100-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஃபிளிப்கார்ட்டில் மட்டும் பழைய விலையில் இந்த இயர்போன்கள் விற்பனை ஆகி வருகின்றன. அந்த விலையும் விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.