செய்திகள்
கட்டிட தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
தோகைமலை அருகே கட்டிட தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 55). இவருடைய மனைவி புனிதா (47). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் கடந்த 26-ந் தேதி இரவு வழக்கம் போல் வேலை முடிந்து தங்களது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் ஆர்.டி. மலை அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி மீனாட்சி சுந்தரம், புனிதா ஆகியோரிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் இனாம்புலியூர் தெற்கு தெருவை சேர்ந்த பிரகாஷ் (24), வீரமலை கவுண்டம்பட்டியை சேர்ந்த ராமு (19) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.