செய்திகள்
கொலை

அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம்: கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற பிளஸ்-2 மாணவன்

Published On 2021-01-20 06:37 GMT   |   Update On 2021-01-20 06:37 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற பிளஸ்-2 மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் பெனுமூர் அடுத்த தூர் பள்ளியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் காயத்ரி (வயது 19). கல்லூரி மாணவி. பூதலபட்டு அடுத்த சிந்தமாகுள பள்ளியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவன் ஒருவரும், காயத்ரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருவரும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். அலைபாயுதே சினிமா பட பாணியில் அங்குள்ள கோவிலில் தாலி கட்டிக்கொண்டு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இதற்கிடையே காதலர்கள் இருவரும் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டது அவரது பெற்றோர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து இருவரின் பெற்றோரும் பூதலபட்டு போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். காதல் தம்பதியினரை அழைத்து விசாரித்த போலீசார் மாணவன் 17 வயது மைனர் என்பதால் திருமணம் செல்லாது என கூறி இருவரையும் அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் காயத்ரிக்கு அவரின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவன் எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என எண்ணி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

நேற்று மாலை தூர்பள்ளி கிராமம் வழியாக காயத்ரி விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அங்கு பதுங்கி இருந்த மாணவன் காயத்ரியை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தி கழுத்தை அறுத்து விட்டு தப்பினார்.

அப்பகுதி பொதுமக்கள் காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர். இதற்கிடையே காயத்ரி கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மாணவனின் வீட்டை சூறையாடி தீயிட்டு கொளுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
Tags:    

Similar News