செய்திகள்
ராகுல் காந்தியை உ.பி. போலீஸ் தடுக்கும் காட்சி

ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

Published On 2020-10-01 21:48 GMT   |   Update On 2020-10-01 21:48 GMT
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல், பிரியங்கா உள்பட 200 பேர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நொய்டா:

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டனர். 

ஆனால், அவர்களை உத்தரபிரதேசம் மாநிலத்தின் நொய்டாவில் உள்ள கவுத்தம புத்தா நகர் மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசார் தடுக்க முயற்சி செய்தபோது ராகுல் காந்தி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் கட்சி ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஹத்ராஸ் மாவட்டம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இதனால், கட்சி ஆதரவாளர்களுடன் சேர்த்து ராகுல், பிரியங்காவை கவுத்தம புத்தா நகர போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட ராகுல் மற்றும் பிரியங்காவை அங்குள்ள விருந்தினர் மாளிகைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரம் வைத்திருந்த அவர்கள், பின்னர் இருவரையும் விடுவித்தனர். மேலும், அவர்களை உத்தரபிரதேச போலீசார் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், தடையை மீறி பேரணியாக வந்ததாக கூறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 200-க்கும் அதிகமான காங்கிரஸ் கட்சியினர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 188, 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் கவுத்தம புத்தா நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News