செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா- கண்காணிப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-01-13 06:04 GMT   |   Update On 2021-01-13 06:04 GMT
கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தது.. இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகை ஊராட்சி கொட்டியப்படுகை கிராமத்தை சேர்ந்த 40 வயது நிரம்பிய நபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ததில் அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

நேற்று முன்தினம் வரை 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொற்று கண்டறியப்பட்ட கொட்டியப்படுகை கிராம ஊர் எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தி, வெளிநபர்கள் யாரும் ஊருக்குள் செல்ல முடியாத வகையில் அங்கு போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டியப்படுகை கிராமத்தில் நேற்று 125 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News