செய்திகள்
பேரண்டப்பள்ளி அருகே காரில் குட்கா கடத்தியவர் கைது
பேரண்டப்பள்ளி அருகே காரில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூரில் இருந்து நேற்று மாலை கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நின்றிருந்த போலீசாரை பார்த்ததும் டிரைவர், காரை மீண்டும் ஓசூர் நோக்கி ஓட்டி சென்றார். இதனால் மீண்டும் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூளகிரி அருகே போலீசார் அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்று விட்டது. இதனால் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் காரை நிறுத்த முயன்ற போது, அங்கு கார் டயர் பஞ்சரானது. போலீசார் டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டுவை சேர்ந்த அருணாச்சலம் (வயது24) என்பதும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு, 16 மூட்டைகளில் ரூ.94 ஆயிரத்து 400 மதிப்புள்ள, 112 கிலோ குட்காவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. அட்கோ போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்து. விசாரித்து வருகின்றனர்.