இந்தியா
உ.பி.யில் ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்... எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
தப்பி ஓடிய ஆசிரியர்களை துரத்திச் சென்ற போலீசார் தடியாலும், காலாலும் எட்டி உதைத்து தாக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் 2019ம் ஆண்டு 69 ஆயிரம் பள்ளி உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகப்பெரிய அளவில் தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் வாய்ப்புகள் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி ஆணை வழங்க கோரிக்கை விடுத்து வந்த ஆசிரியர்கள், நேற்று லக்னோவில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முதல்வரின் இல்லம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரச்சனை உருவானது. ஆசிரியர்கள் கலைந்து செல்லாததால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதில் பலர் காயமடைந்தனர்.
தப்பி ஓடிய ஆசிரியர்களை துரத்திச் சென்ற போலீசார் தடியாலும், காலாலும் எட்டி உதைத்து தாக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
போலீசாரின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கை மற்றும் பாஜக அரசாங்கத்தை முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர்.