செய்திகள்
பெண் மரணம் விவகாரம்: மகாராஷ்டிர மாநில மந்திரி சஞ்சய் ரத்தோட் ராஜினாமா
பெண் ஒருவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், மகாராஷ்டிரா மாநில வனத்துறை மந்திரி சஞ்சய் ரத்தோட், அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 23 வயது பெண் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து புனே போலீசார் தற்கொலை கோணத்தில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அப்போது மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருக்கும் சஞ்சய் ரத்தோட் பெயர் அடிப்பட்டது. இதனால் சஞ்ச் ரத்தோட் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது. அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், பட்ஜெட் கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என தெரிவித்தது.
சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், நெருக்கடிக்கு அடிபணிந்து முதல்வர் உத்தவ் தாக்கரே எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சஞ்சய் ரத்தோட் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியை ராஜினாமா செய்த சஞ்சய் ரத்தோட், ‘‘நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கொடுத்துவிட்டேன். எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத்தை அமைதியாக நடத்த விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் நானே ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்னே். இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற விரும்புகிறேன்’’ என்றார்.
நாளை மகாராஷ்டிர மாநில சட்டசபை கூடுகிறது.