செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஸ்வீடன் அரச தம்பதிகள் சந்திப்பு
இந்தியா வந்துள்ள ஸ்வீடன் நாட்டு மன்னர் மற்றும் அரசி பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி:
ஸ்வீடன் நாட்டு மன்னர் 16ம் கார்ல் கஸ்டப் மற்றும் அரசி சில்வியா ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இன்று காலை டெல்லி வந்த அரச தம்பதிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்வீடன் அரச தம்பதிகள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் விருந்தினர் இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
‘இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அரச தம்பதிகள் பிரதமருடன் கலந்துரையாடினர். இந்தியாவிற்கும் சுவீடனுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நட்பு மற்றும் ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மை, சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் சட்டத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
அரசியல், வணிக, அறிவியல் மற்றும் கல்வித் துறைகளில் வழக்கமான தொடர்புகள் நமது இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளன’ என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அரச தம்பதியர் சந்திக்க உள்ளனர். முன்னதாக, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.