செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிய பொதுமக்கள்.

இன்று கடைசி நாள் வினியோகம்- பொங்கல் பரிசு 1 கோடியே 85 லட்சம் பேருக்கு கிடைத்தது

Published On 2020-01-13 05:55 GMT   |   Update On 2020-01-13 11:39 GMT
பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு நேற்று வரை 1 கோடியே 85 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ளவர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வினியோகிக்கப்படுகிறது.

நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் வாங்கி செல்ல வசதியாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதனால் தள்ளு-முள்ளு எதுவும் இல்லாமல் வரிசையில் நின்று மக்கள் வாங்கி சென்றனர்.

ஒரு கோடியே 97 லட்சம் பேர் அரிசி பெறக்கூடிய ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு நேற்றுடன் வினியோகிக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு கடைசி நாளாகும்.

இதுவரையில் வாங்காதவர்கள், வெளியூர் சென்றவர்கள், முறையான ஆவணங்களை கொடுக்காமல் இருந்தவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல்பரிசு வினியோகிக்கப்படும்.


நேற்று ஒரு சில ரே‌ஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பில் உள்ள முந்திரி, ஏலக்காய், திராட்சை போன்றவை இடம் பெறவில்லை. பெரம்பூர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொங்கல் படைக்க பயன்படுத்தக் கூடிய பொருட்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதுபோன்று ஒரு சில இடங்களை தவிர, மற்ற இடங்களில் எவ்வித குளறுபடியும் இல்லாமல் பொங்கல் தொகுப்பு சிறப்பான முறையில் வினியோகிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நேற்று வரை பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு 94 சதவீதம் கொடுக்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை வழங்கப்படும். விடுப்பட்டவர்கள், வாங்காதவர்கள் உரிய ஆவணத்துடன் சென்றால் கிடைக்கும் என்றனர்.
Tags:    

Similar News