உள்ளூர் செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2021-12-04 09:00 GMT   |   Update On 2021-12-04 11:10 GMT
8-ந் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.



நாளை 5-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

6-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஒருசில இடங்களில் மிதமான மழையும், 7-ந் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

8-ந் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எடப்பாடி, மோகனூர் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News