அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- கேஎஸ் அழகிரி கோரிக்கை
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கொரோனா தொற்று காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து ஜனநாயக செயல்பாடுகள் முடங்கிய நிலையில் மத்திய அரசுக்கு தெளிவு ஏற்படுத்துகிற வகையில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் போது சரியான வழிகாட்டுதலை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது.
இதுகுறித்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு 50 சதவிகிதமும், மாநில அரசுகள் 50 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதை தவிர்த்து, மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று கூறியிருப்பது இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.
மத்திய அரசு கொள்முதல் விலையான ரூ.150 விலையில் கூட தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச லாபம் இருக்கிறது. தற்போது தடுப்பூசி கொள்கையின்படி மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.34,400 கோடி செலவாகும். இதன்மூலம் மொத்தம் ரூ.42,000 கோடி தான் செலவாகும். ஏற்கனவே, 2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்தகால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும்.
தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து இதற்கான நிதியை ஏற்றுக் கொண்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி உடனடியாக தடுப்பூசி போட்டு கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்காக போராடுகிற மக்களை பாதுகாக்க வேண்டும்.
இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை பிரதமர் மோடி புரிந்து கொண்டு ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடிக்கு கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பிரதமர் மோடி முடிவெடுத்தால் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போட முடியும். இதை செய்வதன் மூலமாக இந்திய மக்களின் காப்பாற்றுகிற பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.