தமிழ்நாடு
ரகுமத் நகரில் 9 நாட்களாக வடியாமல் உள்ள வெள்ளநீரை காணலாம்

வெள்ளம் வடியாத நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் கனமழை

Published On 2021-12-04 04:55 GMT   |   Update On 2021-12-04 04:55 GMT
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைந்தாலும், குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நெல்லை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக ஏராளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் வெள்ளநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் விட்டுவிட்டு பெய்யும் மழை மற்றும் தண்ணீர் ஊற்றெடுப்பதால் மாநகர பகுதிகளான முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர், பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

அதில் துர்நாற்றமும் வீச தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

நேற்று ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் அதிகாலை முதலே எட்டயபுரம், சிந்தலக்கரை, துரைச்சாமியாபுரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

கோவில்பட்டியில் காலை முதல் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எட்டயபுரம்-தூத்துக்குடி சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்தது. அணை பகுதிகளில் மட்டும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு அணை பகுதியில் 14.8 மில்லிமீட்டர் பதிவாகியது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 115.50 அடி நீர் இருப்பு உள்ளது.

பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 139.15 அடியும், சேர்வலாறு அணையில் 140.85 அடியும் உள்ளது. நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பி வழிகின்றன.

இதுவரை மாவட்டத்தில் நிரம்பாத அணையான 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, அடவிநயினார், சங்கரன்கோவில் பகுதியில் அதிகபட்சமாக தலா 12 மில்லிமீட்டரும், கடனா அணை பகுதியில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. செங்கோட்டை, தென்காசி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை லேசான மழை பெய்தது.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. ஒரு சில கிராமங்கள் இருளில் மூழ்கின. இன்று காலை வரை மின்தடை இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைந்தாலும், குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.



Tags:    

Similar News