செய்திகள்
அணையிலிருந்து அதிக தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள் -மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்
முல்லைப் பெரியாறு அணையை திறக்கும் முன், அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பினராயி விஜயன் கூறி உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. விரைவில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2109 கன அடியாகவும், தண்ணீர் திறப்பு 1750 கன அடியாகவும் உள்ளது. மழை தீவிரமடையும்பட்சத்தில் அணை மொத்த நீர்மட்டமான 142 அடியை எட்டலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீரை எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணையை திறக்கும் முன், அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஷட்டர்களை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கேரள அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறி உள்ளார்.