ஆன்மிகம்
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளித்த போது எடுத்தபடம்.

திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு

Published On 2021-11-29 07:02 GMT   |   Update On 2021-11-29 07:02 GMT
நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் காட்சி அளிக்கும். இதற்காக கோவிலில் இருந்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திரி மற்றும் நெய் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது.

தீபத்திருவிழாவின் போது ஏற்றப்படும் மகா தீபத்தை அன்று நேரில் வந்து பார்க்க இயலாத பக்தர்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மகா தீபத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 10-வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது சாலையில் நின்ற பக்தர்கள் மகா தீபத்தை தரிசனம் செய்து வணங்கினர். தொடர்ந்து மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இரவுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர் கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு தீப மை வைக்கப்படும்.

பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் தீப மை வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் ெதரிவித்தனர்.
Tags:    

Similar News