செய்திகள்
செயின் பறிப்பு

மதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு

Published On 2019-11-17 12:49 GMT   |   Update On 2019-11-17 12:49 GMT
மொபட்டில் சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை வண்டியூர் ஆர்.வி.பத்மா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இரும்பு வியாபாரி. இவரது மனைவி விஜயராணி (வயது 45).

சம்பவத்தன்று இவர், தனது மகளுடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். யாகப்பா நகர் சர்ச் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென மொபட்டை மறித்து விஜயராணியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த 2 பேரை தேடி வருகின்றனர்.

வண்டியூர், அண்ணா நகர், யாகப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு நடந்து வருகிறது. இதனால் பெண்கள் வெளியில் செல்லவே பீதியடைந்துள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News