செய்திகள்
அமைச்சர் கேஎன் நேரு

இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- அமைச்சர் கே.என்.நேரு

Published On 2021-07-17 10:43 GMT   |   Update On 2021-07-17 10:43 GMT
சென்னையில் அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வு கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செயல் இயக்குநர் ஆகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிர்க்கு இடஒதுக்கீடு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவற்றை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

இதற்காக வாக்காளர் பட்டியலை சரி செய்யும் பணியும் தற்போது விரைவுப்படுத்தப்படுகிறது.

சென்னையில் அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வு கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மீஞ்சூர் மற்றும் வட நெம்மேலியில் 100 எம்.எல்.டி அளவிற்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 1100 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 400 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 3 வருடத்தில் நிறைவு பெறும். 600 எம்.எல்.டி. குடிநீர் காவிரியில் இருந்து கொண்டு வர திட்டம் உள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு ஆகாய தாமரையை அப்புறப்படுத்த 3 நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் விதமாக குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டு வீடுகள்தோறும் தண்ணீர் வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கண்டறிந்து, அதை மக்கள் இயக்கமாக மாற்றி மழை நீர் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News