செய்திகள்
குல்பதின் நைப்

சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை: குல்பதின் நைப் ஆதங்கம்

Published On 2019-07-22 11:25 GMT   |   Update On 2019-07-22 11:25 GMT
உலகக்கோப்பையில் சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்று ஆப்கானிஸ்தானின் அப்போதைய கேப்டன் குல்பதின் நைப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் அஸ்கர் ஆப்கன். இவரது தலைமையில் ஆப்கானிஸ்தான் ஏராளமான வெற்றிகளை குவித்தது. இவரது விடாமுயற்சியால் ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது.

ஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் அஸ்கர் ஆப்கன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக குல்பதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு ரஷித் கான், முகமது நபி போன்ற சீனியர் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் கிரிக்கெட் போர்டின் முடிவு என்பதால்  ஏற்றுக் கொண்டனர்.

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 9 ஆட்டத்திலும் தோல்வியடைந்தது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் கடும் நெருக்கடி கொடுத்தது.

இதனால் குல்பதின் நைப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று குல்பதின் நைப் குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகக்கோப்பையில் நாங்கள்  அதிக அளவில் சீனியர் வீரர்களைச் சார்ந்துதான் இருந்தோம். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அணி தோல்வியடைந்த பின்னர் சோகத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக சிரித்துக் கொண்டிருந்தனர். பந்து வீசுங்கள் என்று அவர்களிடம் நான் கூறும்போதும் கூட, அவர்கள் என்னை பார்க்கவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News