செய்திகள்
ஆர்யன் கான் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வரும் என்.சி.பி. அதிகாரிகள்
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் என்.சி.பி. மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருகிறது.
சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பொருள் விருந்தில் கலந்து கொண்டு பொதை பொருள் பயன்படுத்தியதாகவும், போதை பொருள் வைத்திருந்ததாகவும் தேசிய பொதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளால் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.
என்.சி.பி. சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீன் உத்தரவு குறித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் விவரம் முழுவதுமாக வெளியானது. அதில் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் என்.சி.பி. அதிகாரிகள் ஆர்யான் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருவதாக என்.சி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்ற ஜாமீன் உத்தரவை ஆய்வு செய்தபிறகு, சட்டப்பூர்வமான கருத்துகளை தற்போது எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.